Thursday, August 7, 2008

தேவயானியும் ஹிலாரி கிளின்டனும்...

(முன்னுரையாக கசனின் கதை மிக மிகச் சுருக்கமாக)



தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் கட்டளைக்கிணங்க அசுரகுல குரு சுக்கராச்சாரியாரிடம் மாணவனாக சேர்ந்தான் பிரகஸ்பதியின் மகன் கசன்.


இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பதுதான் நோக்கம்.

கசனின் நோக்கம் தெரிந்திருந்தும் சம்பிரதாயப்படி கசனை சீடனாக ஏற்றார் சுக்கராச்சாரி. எனினும் சஞ்சீவினையை மட்டும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று உறுதிபூண்டார்.


சுக்கராச்சாரியாருக்கு தேவயானி என்றொரு தேவதை மகளாய் இருந்தாள்.

வாதங்களில் தந்தையையே திணறவைத்த அந்த வாலிபனை வியந்து பார்த்தாள் தேவயானி. வியப்பு விரைவில் காதலானது.


மெல்ல மெல்ல இந்த நெருக்கம் அசுரர்களுக்குத் தெரிந்ததும், எங்கே சுக்கராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கசனை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டார் மன்னராக இருந்த விருஷபர்வா.

அதன்படியே கசனை கொன்று துண்டு துண்டாக்கி நாய்களுக்குப் போட்டுவிட்டனர்.


கசனைக் காணாது தேவயானி தவித்துப் போய்விட்டாள். “கசனுக்கு ஏதோ ஆகிவிட்டது. அவனை உயிரோடு கொண்டு வந்தே ஆக வேண்டும்” என்றாள். சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தார் சுக்ராச்சாரியார். கசன் நாய்களின் உடலைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டான்.


செய்தியறிந்து விதிர்விதிர்த்துப் போனாலும் தனது முயற்சியைக் கைவிடாத விருஷபர்வா, கசனைக் கொன்று எதித்து அந்தச் சாம்பலை மதுவில் கலந்து சுக்கராச்சாரியாருக்கே கொடுத்துவிடும்படி தனது ஆட்களை ஏவினார். அவர்களும் அப்படியே செய்துவிட்டனர். மீண்டும் கசனைக் காணாது கண்ணீர் விட்டாள் தேவயாணி. அன்பு மகளின் கலக்கத்தைக் காணப் பெறாத அவளின் தந்தை சஞ்சீவினியை உச்சரிக்கத் தொடங்கினார். அவரின் வயிற்றுக்குள் இருந்த கசன் மெல்ல மெல்ல உணர்வுபெற ஆரம்பித்தான். இதனை அறிந்த குருவானவர் மந்திரத்தைப் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.


“மகளே! கசன் என் வயிற்றுக்குள் இருக்கிறான். மந்திரத்தை முழுவதும் சொல்லி முடித்தால் என்னைப் பிளந்து கொண்டு வெளிப்படுவான். நான் மாண்டு போவேன். எனவே நீ கசனை மறந்து விடு. அவன் கதை முடிந்து விட்டது.”


தேவயானியின் மனோநிலை விசித்திரமாக இருந்தது. தனது உயிருக்கு ஆபத்து என்றதும் கசனை மறந்து விடுவாள் என்றுதான் சுக்கராச்சாரியாரும் நினைத்தார். அவளோ புலம்பினாள்.


“எனக்கு நீங்களும் வேண்டும் கசனும் வேண்டும். இருவரும் எனது இரு கண்கள். எந்த ஒன்றையும் நான் இழக்க முடியாது.”


சுக்ராச்சாரியார் எதையோ இழந்தது போலானார். தனக்கு சமதையாக இன்னொரு உயிரைத் தனது மகள் கருதக்கூடும் என்கிற உண்மை அந்தத் தந்தைக்கு உள்ளூரப் பெரும் வேதனையைத் தந்தது.


“இருவரில் ஒருவரைத்தான் காக்க முடியும். இருவரையும் எப்படிக் காக்க முடியும்?”


“அதற்கு வழி இருக்கிறது தந்தையே. சஞ்சீவினி மந்திரத்தை முதலில் எனக்குச் சொல்லிக் கொடுங்கள் பின்னர். தாங்கள் துவங்கிய மந்திரத்தை முழுமையாகச் சொல்லி கசனை உயிர்ப்பியுங்கள். சஞ்சீவினி கொண்டு உங்களை நான் எழுப்பி விடுகிறேன்.”


சுக்ராச்சாரியார் முகத்தில் லேசான புன்னகை. எதையோ யோசித்தார்.

“மகளே! சற்று நேரம் அப்பால் இரு. நாங்கள் இருவருமே உயிருடன் வருவோம்.”


அப்படியே தேவயானி வேறுபுறம் சென்றாள். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது குருவும் சீடனும் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருநதனர். அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. உலகத்தையே வென்றுவிட்ட உற்சாகம். கசனைக் கட்டிப் பிடித்துக் கூத்தாடினாலள். இதுதான் தருணம் என்று கசனை தான் மனதில் வரித்திருக்கிற விஷயத்தையும் தந்தையிடம் கூறிவிட்டாள். குருவுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் சீடனுக்கு...?


பல்வேறு சமாதானங்கள் கூறி தேவலோகம் சென்றுவிட்டான் கசன்.


திகைத்துப் போன தேவயானி நெடுநேரம் அழுதாள். திடீரென்று ஒரு ஞாபகம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த தந்தையே நோக்கினாள்.


“எப்படி இருவருமே உயிரோடு வந்தீர்கள்?”


“ம்... முதலில் சஞ்சீவினியை வயிற்றுக்குள் இருந்த கசனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனை உயிர்ப்பித்தேன். என்னைப் பிளந்து கொண்டு வெளியே வந்த அவன். அதே மந்திரத்தின் மூலம் என்னை உயிர்ப்பித்தான். என்ன இருந்தாலும் சொன்ன சொல்லைத் தட்டாத சீடன். எனக்குத் துரோகம் இழைக்கவில்லை.”


“ஐயோ! சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டு போய்விட்டானே! அதற்கு பதிலாக எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே?”


“மகளே! பெண்ணுக்கு எந்த வித்தையையும் கற்றுத் தரக்கூடாது. உனக்குத் தெரியாதா? ஆணுக்குத்தான் உபநயனம். பெண்ணுக்கு உபநயனம் அவளது திருமணமே.”


கசன் தன்னை விட்டுப் போன சோகத்தைவிட வேறு ஒரு சோகம் தன்னைத் தனது பிறப்பிலிருந்தே சூழ்ந்திருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் தேவயானி. பெண் ஜென்மம் என்றால் அத்தனை இழிவா? எதிரியின் மகனுக்குக் கற்றுத்தரும் வித்தையை பெற்ற மகளுக்குக் கற்றுத் தரக்கூடாதா? சுக்கராச்சாரியாரையும் கசனையும் முதன்முதலாக வெறுப்போடு நினைத்தாள்.

அமெரிக்காவுக்கு அதிபர் தேர்தல் வரப்போகிறது.

அதற்கு முன் தேர்தலில் யார் வேட்பாளராக போட்டியிருவது என்பதற்கு ஒரு தேர்தல் நடந்தது.

அதில் ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்களில் இருவர் முக்கியமானவர்கள்.
1. பராக் ஒபாமா
2. ஹிலாரி கிளின்டன்.


இருவருக்கும் இடையே நிகழ்ந்தது கடும் போட்டி. ஒவ்வொரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவில் விவாதிக்கப்பட்டது.


இறுதியில் ஹிலாரியை தோற்கடித்துவிட்டு பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.

பராக் ஒபாமா வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால் ஹிலாரி கிளின்டன் தோல்வியடைய என்ன காரணம்?

வெற்றிக்கு காரணங்கள் சொல்லலாம் தோல்விக்கு எப்படி காரணம் சொல்ல முடியும்?


ஹிலாரி ஒரு அமெரிக்க வெள்ளைக்கார்.
ஆனால் ஒபாமாவோ கருப்பினத்தவர்.


ஹிலாரி கிறிஸ்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஒபாமா கிறிஸ்தவர்தானா என்பதிலேயே சந்தேகங்கள் கிளப்பி விடப்பட்டது. பராக் ஹுஸைன் ஒபாமா என்ற அவரது பெயரை வைத்து அவர் முஸ்லிம் என்றெல்லாம் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.


இப்படி அமெரிக்கர்கள் ஹிலாரியை வெற்றிபெறச் செய்வதற்கு என்னற்ற காரணங்கள் இருந்தும் ஹிலாரி தோல்வியடைந்தார்?


அதுதான் ஏன் என்று புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை பதிவை முதலில் இருந்து படித்துக் கொள்ளுங்கள்.

Wednesday, August 6, 2008

ஆத்துல போட்டாலும் அளந்து போடு...

இந்த தலைப்பு ஒரு பழமொழி.
இதற்கு என்ன விளக்கம் என்று பலரும் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நான்கூட யோசிச்சேன்.
ஆனா ஒருநாள் ரேடியோ எஃப்.எம். (எந்தச் சேனல்னு மறந்து போச்சு)
கேட்கும்போது அதுல இந்த பழமொழிக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
தேங்காய ஆத்துக்குள் போடும்போது சைஸ அளந்து போடனும் அப்படி இப்படின்னு ஒரு கலாய்த்தல் நிகழ்ச்சி அது.
இந்த நிகழ்ச்சியைக் கேட்டதும் இந்தப் பழமொழியைப் பத்தி ரெம்ப சீரியஸா யோசிக்க ஆரம்பிச்சேன்.
அப்ப எனக்கு தோன்றிய கருத்தை இப்ப உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஆத்துல போட்டாலும் அளந்து போடு”
இதுக்கு பொதுவா சொல்லுற கருத்து என்னன்னா... ஆறு பிரம்மாண்டமானது அது தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆத்துல போட்டுதான் கழிவை நீக்குவாங்க.
அப்போது அப்படி போடும் போது அளந்து அதாவது கவனித்து தேவையா இல்லையா என்பதைப் பார்த்து போடனும் என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் எனக்கு தோன்றிய கருத்து என்னவென்றால்
அவாள்கள் பாஷையில்
ஆத்துல - வீட்டுல
இதன் படி
வீட்டுக்கே - குடும்பத்துக்கே செலவு செய்தாலும் கணக்கிட்டு செய்ய வேண்டும்.

டிஸ்கி: இதற்கு நீங்களும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.