Thursday, April 17, 2008

கண் தெரியாத இருவர் எப்படிப் பேசுவார்கள்?

தகவல் தொடர்பு என்பது இன்று எவ்வளவோ முன்னேறி விட்ட காலம்.

புறா காலில் கடிதத்தை கட்டிவிட்ட காலம் ஒன்று இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி போஸ்ட் ஆபீஸ், தந்தி, தொலைபேசி, பேஜர், செல், ஈமெயில், வாய்ஸ் சாட்டிங், வீடியோ சாட்டிங் என தகவல் தொடர்பு இன்று எங்கோ போய் விட்டது.

ஆண்டிப்பட்டியில் உட்கார்ந்து கொண்டு ஆஸ்திரேலியாவிலிருக்கும் அண்ணனுடன் ஒருவன் நேருக்கு நேராகவே பார்த்துப் பேச முடியும்.

இவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps.

நவீன வசதிகள் இல்லாத இடங்களுக்கு சிலநேரங்களில் சிலர் மூலம் தகவல்களைச் சொல்லி அனுப்பும் போது அது அப்படியே நேர்மாறாக எப்படியெப்படியெல்லாமோ மாறி .... அப்பப்பா அதை நினைக்கையில் ரெம்பவே வருத்தமாக இருக்கிறது.

இப்படி மாறிச் சென்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையிலும்...

என்னுடைய அப்பாவுடைய அண்ணன் (பெரியப்பா) இறந்து விட்டார்.
அவருடைய மகளுடைய மகன் கடையநல்லூர் அருகில் ஒரு கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்த மரணச் செய்தியை அறிவித்து அவரை உடனே எங்கள் ஊருக்கு வரச் சொல்ல வேண்டும்.

அந்த ஏரியா நாட் ரீச்சபிளி்ல் உள்ளது போல. எங்கள் அவசரம் தெரியாமல் நாங்கள் கால் பண்ணும் ஒவ்வொரு தடவையும் ஒரு லேடி எடுத்து ஏதேதோ ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

எப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் கூறினால்தான் அவர் உடனே புறப்பட்டு இறுதிச் சடங்குகள் முடியும் முன் எங்கள் ஊருக்கு வர முடியும் என்பதால் அருகில் உள்ள தென்காசியில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் (அங்கு எனக்கு நட்பு வட்டம் அதிகம்) சொல்லி அவரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சொன்னோம்.

அவர் அவருடைய நண்பரிடம் சொல்லி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி, அவர் இன்னொரு நண்பரிடம் கூறி (இந்த மூன்றாமவரும் எனக்கு நண்பர்தான்) செய்தி சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் என் அக்கா மகன் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்.(அவர் ஏற்கனவே ஏதேச்சையாக புறப்பட்டு விட்டதால்)

அதற்குள் எனக்கு போன் அந்த மூன்றாமவரிடமிருந்து...

“என்ன உங்க அப்பா இறந்துட்டாங்களாமே? நல்லாத்தானே இருந்தாங்க”

எனக்கு ஒரே குழப்பம். அவரிடம் விஷயத்தை கூறி முடிப்பதற்குள் லைனில் இன்னொரு போன். இப்படி போனுக்கு மேல் போன்.

திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பன் எங்கள் ஊருக்கே வந்து விட்டான்.

“அடப்பாவி ஒரு போன் பண்ணிவிட்டு வந்திருக்கக் கூடாதா?“ என்றதற்கு
“அவசரத்தில் என்ன பண்ணணும்னே தெரியல அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று சொன்னான்.

இப்படி எங்கேயோ ஒரு சின்ன கம்யூனிகேஷன் லேப்ஸ் நடந்து பல பிரச்சினைகள் விளைந்து விடுகிறது.

என் பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரியதாக இல்லை.

சில நேரம் இதுபோன்ற தகவல் தொடர்புப் பிழைகள் மிகப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் தகவல் தொடர்புக்கு உண்டான முக்கிய அம்சங்களை நாம் சரியாகக் கடைப்பிடிப்பதி்ல்லை என்பது தான்.

தகவல் தொடர்பில் மிகவும் முக்கியமானது “சொல்லப்படும் விஷயங்களை முதலில் நன்றாக கவனிப்பது; அப்ஸர்வ் செய்வதுதான்.”

எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சரியாக கவனிக்காமல், அதனைக் கிரகிக்காமல் இருந்தால் அதனை வெளிப்படுத்தும் போது தவறு ஏற்படவே செய்யும். பொதுவாக நன்கு அப்ஸர்வ் செய்தாலே அவுட்புட்டில் 100% சரியாக வரும் என்று சொல்ல முடியாது.
அப்படியிருக்க inputலிலேயே மிஸ்டேக் என்றால்?

என் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.

“அரை மணி நேரம் கழித்து போன் வந்தது. டேய் இங்கே நடராஜா தியேட்டரே இல்லையே” என்றான்.
“ நீ எங்கே நிற்கிறாய் என்றேன் நான் சூளைமேட்டில்தான் இருக்கிறேன்.” என்றான்.
“நீ ஏன் சூளை மேட்டிற்கு போன?” என்றேன்.

“நீ தானே சொன்னாய் சூளைமேட்டிலுள்ள பெரிய பண்ணை மளிகை அருகில் நடராஜா தியேட்டர் முன்பு வா என்று” அவன் சொன்னான்

என்ன செய்வது டிரைவிங்கில் பேசும் போது பெரிய மேட்டில் உள்ள சூளை என்பது அவனுக்கு சூளைமேட்டிலுள்ள ஏதோ பெரிய என்று விளங்கி சூளைமேடு சென்று பெரிய பண்ணை மளிகை கண்ணில் படவும் அங்கே நடராஜா தியேட்டரைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறான்.

இப்படித்தான் என்னோட டீம்ல இந்தக் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிய விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இது சம்பந்தமாக பல விஷயங்களைக் கூறி விட்டு நான் கேட்டேன்

“தகவல் தொடர்பு என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு நபர்கள் பேசிக் கொள்வது கூட தகவல் தொடர்பு தானே.
உதாரணமாக நாம் எல்லோரும் சாதாரண சராசரி மனிதர்கள் எப்படிப் பேசுவோம்?”
(எல்லோரும் சாதாரணமாகத்தான் பேசுவோம் என்று முழித்துக் கொண்டிருந்தனர்.)

“சரி அப்ப கண் தெரியாத இருவர் சந்தித்துக் கொள்கின்றனர் அவர்கள் எப்படிப் பேசுவார்கள்? என்று கேட்டேன்.

உடனே எல்லோரும் (அதிகமானோர்) “சைகையால் பேசிக் கொள்வார்கள்” என்றனர்.
“ஏங்க எப்படிங்க சைகையால் பேசினால் எப்படி அவர்களுக்குத் தெரியும் அவர்களுக்குத்தான் கண் தெரியாதே என்றேன்.”
“அதான எப்படி தெரியும்” என்று சிறிது நேரம் யோசித்து விட்டு “அட அவங்களும் வாயாலதான் பேசுவாங்க” என்று கூறினர்.

இப்படித்தாங்க இன்றைய தலைமுறை இருக்கு.

அதனால பதிவுகளைப் படிக்கும் போது நன்றாகப் படித்து பிறகு கமென்ட்ஸ் கொடுக்கவும்.
இல்லையெனில் கண் தெரியாத இருவர் சைகையால் பேசியது போன்றுதான் இருக்கும்.

என்றும் மனதோடு மனதாய் உங்கள் புகழன்

24 comments:

Thamiz Priyan said...

இருங்க. பதிவை படிச்சுட்டு வர்ரேன்... :)

Thamiz Priyan said...

ஆகா அப்ப எங்களை எல்லாம் பதிவைப் படிக்க சொல்றீங்களா?.... இருந்தாலும் நல்ல விஷயம் தான்.... முயற்சி செய்கிறோம்...

பாச மலர் / Paasa Malar said...

தகவல் தொடர்புப் பிழைகள் நேரும் போது குழப்பம்தானே..பதிவு படிப்பதோடு இதை பொருத்தியிருப்பது சுவாரசியம்

ரூபஸ் said...

உங்கள் எழுத்து யதார்த்தமாய் உள்ளது. செய்தியை உள் வாங்குதல் மிகவும் முக்கியம். சூழ்நிலை மற்றும் உணர்ச்சிகளும் கூட தகவல் தொடர்பில் மிகவும் முக்கியமான அம்சங்கள்.

வாழ்த்துகள் புகழ்.. தொடர்ந்து எழுதுங்கள்

புகழன் said...

வாங்க பாசமலர்
வருகைக்கு நன்றி

புகழன் said...

வாங்க ரூபஸ்
உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
தொடர்ந்து படியுங்கள்

புகழன் said...

//
ரூபஸ் said...
உங்கள் எழுத்து யதார்த்தமாய் உள்ளது.
//

உண்மையையும் யதார்த்தத்தையும் எழுதும் போது கண்டிப்பாக அது யதார்த்தமாகத்தானே இருக்கும்.

தமிழ் said...

/இவ்வளவு முன்னேறியதாலோ என்னவோ இன்று உள்ள தலைமுறையிடம் தகவல் தொடர்பில் பல communication Laps./

உண்மை தான்

நல்லச் செய்தி

புகழன் said...

திகழ்மிளிர் வருகைக்கு நன்றி
தொடர்ந்து படியுங்கள்

புகழன் said...

படிக்கிறவங்க எல்லாரும் ரெம்பவே எச்சரிக்கையா கமென்ட் கொடுப்பதுபோல் தெரிகிறது.

Divya said...

\\ புகழன் said...
படிக்கிறவங்க எல்லாரும் ரெம்பவே எச்சரிக்கையா கமென்ட் கொடுப்பதுபோல் தெரிகிறது.\\

நறுக்கென்று கடைசி வரியில் சொல்லிட்டீங்களே...அப்புறமும் எச்சரிக்கையோட கமெண்ட் போடலினா எப்படி???

நல்லதொரு விஷயத்தை எளிமையான நடையில் அழகா சொல்லியிருக்கிறீங்க புகழன்!

Divya said...

\\\\என் நண்பன் ஒருவனிடம் “டேய் பெரியமேடு அருகில் உள்ள ‘சூளை’யில் நடராஜா தியேட்டர் முன்பு வந்து நில். அரை மணி நேரத்தில் நான் அங்கு வந்து விடுகிறேன் என்று போனில் கூறினேன்.\\

orey sentence yil nerya informations koduthathum.....confuse agitaro unga friend???

konjam nithanama...ovoru idama solirunthurukalam,

ellarukum ungalattum OBSERVATION skill irukumnu nenaika koodathiliya????

புகழன் said...

வருகைக்கு நன்றி திவ்யா
கமென்ட்ஸ்கூட நல்லா கொடுக்குறீங்க.
அதை தமிழிலேயே டைப் செய்யலாமே?
ஏன்?

சத்யா said...

hmm.. very interesting read! thanksnga!

புகழன் said...

சத்யாவின் வருகைக்கு நன்றி
ஏன் தமிழில் டைப் செய்ய என்ன பிரச்சினை?
நிறையபேர் தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்கிறார்ள். ஆனால் அவர்கள் பதிவுகளை மட்டும் எப்படி தமிழில் போடுகிறார்கள்?

Sen22 said...

யதார்த்தமான பதிவு....


Senthil
Bangalore

புகழன் said...

நன்றி செந்தில் தொடர்ந்து படியுங்கள்

தமிழன்-கறுப்பி... said...

எப்படி இருக்கிறிங்க புகழன்...

தமிழன்-கறுப்பி... said...

அப்ப கட்டாயம் பதிவு படிக்கணும்...

தமிழன்-கறுப்பி... said...

இப்ப பதிவே நிதானமா எழுத மாடடேய்ங்கிறாங்க...(நானெல்லாம பதிவு எழுதுறனே...)

தமிழன்-கறுப்பி... said...

நல்ல விடயம் புகழன்...

DAWOOD said...

நிதானமா ௭ழுதுங்க ஆனா தூங்கிடாதிங்க நன்பா....இது உங்களுக்தான்....ஹா...ஹா...ஹா.....!

Ramya Ramani said...

நல்லா சொன்னீங்க புகழன்! நாம் இப்போ ஒரு Mail அனுப்பிட்டு, call பண்ணி Mail பாத்து reply பண்ணு சொல்வோம் ! communication lapse இப்போ அதிகமாகவே இருக்கோனு தோணுது!

cheena (சீனா) said...

பயனுள்ள பதிவு - தகவல் பரிமாற்றம் என்பது - நாம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால் கவனம் ஈடுபாடு அதிகம் இருக்கும் - தவறு நடக்காது. பொதுவாக சுருக்கமாக, எல்லா தேவையான விபரங்களையும் கூற வேண்டும். மெதுவாக தெளிவாக கூற வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது - தனிப்பதிவே போடலாம் - நல்வாழ்த்துகள்